ஈஸ்வரன், இந்து சமயம்

(ஈஸ்வரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈஸ்வரன் (Ishvara) (சமசுகிருதம் Īśvara), என்ற வட மொழி சொல்லிற்கு அனைத்து உலகங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவர் அல்லது அனைத்துப் படைப்புகளுக்கும் காரண – காரியமாகத் திகழ்பவர் எனப் பொருள்.[1]

ஆறு இந்திய தத்துவங்களில் நியாயா, வைசேடிகம், சாங்கியம், யோகா மற்றும் மீமாம்சை தத்துவங்கள் மற்றும் பௌத்தம், சமண சமயங்கள் ஈஸ்வரனின் இருப்பை ஏற்பதில்லை. ஆனால் பிற்கால சாங்கியம் மற்றும் மீமாம்சம், யோகா, வேதாந்த தத்துவங்கள் ஈஸ்வரன் என்ற இறைக் கொள்கையை ஏற்கிறது.

அனைத்து உலகிற்கும், உயிரினங்களுக்கும் ஆதி காரணமான ஈஸ்வரனை பிரம்மம் என உபநிடதங்கள் அழைக்கின்றன். அனைத்து உலகங்களும், உயிரினங்களும் பிரம்மத்திலிருந்து தோன்றி, பிரம்மத்தினால் காக்கப்பட்டு, இறுதியில் பிரம்மத்தினிடமே ஒடுங்குகிறது. பிரம்மமாகிய பரமாத்மா எங்கும் இருப்பவர், உண்மை, அறிவு, அனந்தமயமானவர் (சச்சிதானந்தம்), என்றும் மாறாத தன்மையாளர்; அனைத்து ஆற்றல்களையும் கொண்டவர்; உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவர்; சிறியவற்றிலெல்லாம் சிறியவர்; எல்லோருள்ளும் உறைபவர். பிரம்மத்திற்கு எவ்வித எல்லையோ, தேவைகளோ இல்லை. படைக்கப்பட்ட எல்லாவற்றிக்கும் அவரே ஆதி மூலமாகவும், ஈஸ்வரனாகவும் (இறைவனாகவும்) உள்ளார். அனைத்து உயர்ந்த குணங்களின் முழுமையானவர். பிரம்மத்தை, குரு மற்றும் சாத்திரங்களின் துணையுடன் மட்டுமே அறிய இயலும்.

உலகமே ஈஸ்வரனால் நிறைந்துள்ளது (ஈசா வாஸ்யம் இதம் சர்வம்) என ஈசா வாஸ்ய உபநிடதம் ஈஸ்வரனின் பெருமையை விளக்குகிறது.

அத்வைத வேதாந்தாம்

தொகு

அத்வைத வேதாந்த கருத்தின்படி, உருவமற்ற, செயலற்ற, குணமற்ற பிரம்மத்தின் ஒரு கூறு மாயையின் சேர்க்கையால், உருவத்துடன் கூடிய ஈஸ்வரன் என்ற தத்துவம் தோன்றுகிறது.[2][2] அந்த ஈஸ்வரனே அனைதுலகமாகவும், அனைத்து உயிரினங்களாகவும் காட்சியளிக்கிறார். உணர்வு (Intellectual) அடிப்படையில், ஈஸ்வரனும் ஜீவாத்மாவும் ஒன்றே, இரண்டல்ல என்று அத்வைதம் வலியுறுத்துகிறது. இதையே தத்துவமசி மற்றும் அஹம் பிரம்மாஸ்மி போன்ற உபநிடத மகாவாக்கியங்கள் மூலம் உணர்த்தப்படுகிறது.[2][3] குருவின் துணையுடன் வேதாந்த சாத்திரங்களை கற்று, ஆத்ம ஞானத்தினால் ஈஸ்வர தத்துவத்தை அறியப்பட வேண்டியது அன்றி; அடையப்படுவது அல்ல என அத்வைதம் வலியுறுத்துகிறது.

விசிஷ்டாத்துவைத வேதாந்தம்

தொகு

விசிஷ்டாத்துவைத வேதாந்த தத்துவத்தின்படி, ஈஸ்வரனாகிய விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும், அந்த விஷ்ணுவே அனைத்துலகங்களையும், உயிரினங்களையும் படைத்தவர். உருவத்துடன் அனைத்து கல்யாணகுணங்கள் கூடிய விஷ்ணுவை, நாராயணன், பரப்பிரம்மம் என்றும் அழைப்பர். அவரே அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர்.[4]

ஜீவாத்மாவும் விஷ்ணுவும் இரண்டாக இருப்பினும், ஜீவாத்மா பக்தி யோகத்தின் மூலம் பரப்பிரம்மனுடன் ஐக்கியம் அடையலாம்.

துவைத வேதாந்தம்

தொகு

மத்வரின் துவைத வேதாந்தத்தின்படி ஈஸ்வரன் மற்றும் பிரம்மம் என்ற தனித்தனி கருத்து ஏற்றுக் கொள்வதில்லை. விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வலியுறுத்துகிறது. ஜீவாத்மா மற்றும் விஷ்ணு தனித்தனியானவர்கள். ஜீவாத்மா ஒரு போதும் பரம்பொருளுடன் ஐக்கியமாவதில்லை.[2][5]

சைவ சித்தாந்தம்

தொகு

சைவ சித்தாந்தம் பதி - பசு - பாசம் என்ற அடிப்படையில், சிவ பெருமானையே அனைத்து தெய்வங்களுக்குள் முழுமுதல் கடவுளாக ஏற்றுள்ளது.

வழிபாடு

தொகு

வைணவர்கள், விஷ்ணு, இராமன், கிருஷ்ணனையும், சைவர்கள் சிவ பெருமானையும், சாக்தர்கள் சக்தியையும், கௌமாரப் பிரிவினர் முருகனையும், கணாபத்தியம் பிரிவினர், விநாயகரையும், சௌரப் பிரிவினர் சூரியனையும் ஈஸ்வரன் எனும் முழு முதற் கடவுளாக வழிபடுகின்றனர்.

ஸ்மார்த்தப் பிரிவினர், சிவன், சக்தி, திருமால், விநாயகர், சூரியன் மற்றும் முருகன் ஆகிய ஈஸ்வரன்களை வணங்குகின்றனர்.

அடிக்குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு